புதுச்சேரி, ஏப். 18: நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பண விநியோகத்தை தடுக்கும் வகையில் லாட்ஜ்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.புதுவையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக தேர்தல் துறையின் உத்தரவுக்கிணங்க நகர பகுதிகளில் உள்ள லாட்ஜ்களில் கிழக்கு, வடக்கு காவல் சரக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அங்கு தங்கியுள்ள நபர்களின் விபரங்கள், வெளியாட்கள் பதுங்கல் உள்ளிட்டவை தொடர்பாக அங்குள்ள ஆவணங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் ஒவ்வொரு தொகுதிகளிலும் பண விநியோகத்தை தடுக்கும் நோக்கில் தேர்தல் பறக்கும் படையுடன், போலீசாரும் தீவிர ரோந்துப் பணிகளில் தொடர்நது ஈடுபட்டு வருகின்றனர்.16ம்தேதி மாலை 6 மணி முதல் தொடர்ந்து 24 மணி நேரமும் இதன் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாக்குபதிவு எந்திரங்களை ஸ்ட்ராங் ரூமில் இருந்து நேற்று மதியம் முதல் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணி ஒருபுறம் நடைபெற்றாலும், மற்றொருபுறம் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பண விநியோகித்தை தடுக்கும் பணியில் பறக்கும் படைகள் தீவிரமாக ஈடுபட்டன. மேலும் கடற்கரை பகுதிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மப்டி உடைகளில் பறக்கும் படையினரின் சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி மதுக்கடைகள், கள்-சாராயக்கடைகளை 3 நாட்கள் மூட கலால்துறை உத்தரவிட்டுள்ள நிலையில், திருட்டுத் தனமாக மதுபானங்கள் விற்கப்படுவதாக வந்த புகார்களின் அடிப்படையிலும் நகரம் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் போலீசார் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.