உடுமலை, ஏப். 17: உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பிஏபி பாசனத்தில் மொத்தம் 3.75 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. விவசாய நிலங்களுக்கு நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது. கடந்த ஜனவரி 5ம் தேதி மூன்றாம் மண்டல பாசனத்துக்கு முதல் சுற்று தண்ணீர் 21 நாட்கள் திறக்கப்பட்டது. பின்னர் போதிய இடைவெளி விட்டு 2வது, 3வது சுற்று தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று காலை 4வது சுற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. பிரதான கால்வாயில் 300 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இது படிப்படியாக 912 கனஅடியாக அதிகரிக்கப்படும். 21 நாட்களுக்கு தண்ணீர் விடப்படும். பிஏபி பிரதான அணைகளில் தண்ணீர் குறைவாக இருப்பதால் சிக்கனமாக பயன்படுத்தும்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணையில் நேற்று நீர்மட்டம் 49.30 அடியாக இருந்தது. கான்டூர் கால்வாய் மூலம் வினாடிக்கு 841 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.