ஆசிரியர் தகுதி தேர்வு ஜூன் மாதம் நடத்த முடிவு

கோவை, ஏப். 17: ஆசிரியர் தகுதி தேர்வு வரும் ஜூன் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் டெட் என்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த டெட் தேர்வு 2 தாள் கொண்டது. தலா 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 1 முதல் 5ம் வகுப்பு வரையும், 2ம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 6 முதல் 8ம் வகுப்பு வரையும் பாடம் நடத்த முடியும். இந்நிலையில், நடப்பாண்டில் டெட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த மார்ச் 15ம் தேதி துவங்கி கடந்த 12ம் தேதியுடன் நிறைவடைந்தது. இத்தேர்வுக்கு மாநிலம் முழுவதும் 5 லட்சத்து 90 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது தேர்வர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணிகள் நடந்து வருகிறது.  இம்மாத இறுதியில் தேர்வு நடைபெறும் தேதி, காலிப்பணியிடம், பாடத்திட்டம் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும். இதனை தொடர்ந்து ஜூன் மாதம் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: