வாக்குப்பதிவை கண்காணிக்க 30 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தி சோதனை

ஈரோடு, ஏப். 17: தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவை கண்காணிக்க 30 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு நேற்று முதல் சோதனை பதிவு நடந்து வருகிறது. மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 18ம் தேதி (நாளை) நடக்கிறது. தேர்தலில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாதவாறு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் 7 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் பிரச்னைக்குரிய வாக்குச்சாவடிகள், மலைப்பகுதி, விஜபி வாக்குச்சாவடி அதிகம் மற்றும் குறைந்த வாக்குகள் பதிவான வாக்குச்சாவடி என 23 ஆயிரம் வாக்குச்சாவடி கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு நேற்று காலை முதல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையிலும், சென்னை தலைமை செயலகத்திலும் அந்த கேமராக்களை பார்த்து கண்காணிக்கும் வகையில் டி.வி. ஸ்கிரீன் அமைக்கப்பட்டுள்ளது. வெப் கேமராவில் பதிவாகும் அனைத்து பதிவுகளும் சிப்பில் ஆன் மற்றும் ஆப்லைனில் முழுமையாக பதிவு செய்யப்படும். இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,`தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 30 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. இதற்கான செயல்பாடு குறித்து நேற்று பரிசோதனை செய்யப்பட்டது.

ஒரு மாவட்டத்தில் உள்ள பல்வேறு சட்டமன்ற தொகுதிகள், பிற மாவட்டத்தில் உள்ள மக்களவை தொகுதியுடன் வருவதால் பிற மாவட்ட தேர்தல் அதிகாரியும்கூட குறிப்பிட்ட மாவட்டம் அதில் உள்ள சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியை காண முடியும். இதற்காக இணைப்பு வழங்கப்பட்டு ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் கண்காணிக்க முடிகிறதா என பதிவு துவங்கியது.வாக்குப்பதிவு செய்யும் அறை மற்றும் வெளியே இருந்து வருபவர்களையும் கண்காணிக்கும் வகையில் இந்த கேமரா அமைக்கப்பட்டுள்ளது. வெப் கேமரா மூலம் கண்காணிக்கும்போது தவறான வாக்குப்பதிவை தடுக்க முடியும். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதலாக வெப் கேமரா இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் உடனடியாக பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Related Stories: