ஈரோடு, ஏப்.16 ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் கணேசமூர்த்தி மொடக்குறிச்சி ஒன்றிய பகுதிகளான முள்ளாம்பரப்பு, கிளியம்பட்டி, என்.ஜி.பாளையம், பூலப்பாளையம், செல்லப்பம்பாளையம், கஸ்பாபேட்டை, அவல்பூந்துறை, புதுப்பாளையம், புங்காட்டுவலசு, சேமூர், சென்னிமலை பாளையம், சுள்ளிமேடு, பள்ளியூத்து, பூலக்காடு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்குசேகரிப்பில் நேற்று ஈடுபட்டார்.பிரசாரத்தின்போது வேட்பாளர் கணேசமூர்த்தி பேசியதாவது: மொடக்குறிச்சி ஒன்றிய பகுதிகள் முற்றிலும் விவசாயம் சார்ந்த பகுதிகளாகும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வறட்சியின் காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. போதிய மழை இல்லாததால் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தாலும் தண்ணீர் கிடைக்காத நிலை இருந்து வருகிறது. எனவே, எதிர்கால நலன் கருதி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மக்களவை தொகுதிக்குட்பட்ட கிராமப்புறங்களில் உள்ள குளம், குட்டைகளை முழுமையாக தூர்வாரி மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை சேமித்து நிலத்தடி நீர் மட்டம் உயர்த்தும் வகையில் நீர் செறிவூட்டும் திட்டங்கள் கொண்டு வர முக்கியத்துவம் அளிக்கப்படும்.