அரியலூர், ஏப். 3: சிதம்பரம் மக்களவை தொகுதி வேட்பாளர்களின் தேர்தல் செலவின கணக்குகள் வரும் 5ம்் தேதி ஆய்வு செய்யப்படுகிறது. சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்குகள், தேர்தல் செலவின பார்வையாளர்கள் தெரிவித்துள்ளவாறு வரும் 5ம் தேதி, 10ம் தேதி, 16ம் தேதிகளில் ஆய்வு செய்யப்படுகிறது. அதன்படி சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம், புவனிகரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மூன்று கட்டமாக அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் (முதல்தளம்) தேர்தல் செலவின பார்வையாளர்களின் முன்னிலையில் ஆய்வு செய்யப்படவுள்ளன.
எனவே நாளை வரையிலான செலவின கணக்குகளை வரும் 5ம் தேதியும், 9ம் தேதி வரையிலான செலவின கணக்குகளை வரும் 10ம் தேதியும், 15ம் தேதி வரையிலான செலவின கணக்குகளை 16ம் தேதியும் ஆய்வு செய்யப்படும். எனவே சிதம்பரம் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், முகவர்கள் தவறாது ஆஜராகி தேர்தல் செலவின அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். செலவினங்களில் எவ்வித விடுதலின்றி முழுமையாக செலவினம் தொடர்பான கணக்கு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.