திருச்செந்தூர், மார்ச் 26: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்செந்தூரில் சத்துணவு திட்டப்பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கலெக்டர் சந்தீப்நந்தூரி அறிவுறுத்தலின்படி திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) இசக்கியப்பன் தலைமையில் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக சத்துணவு திட்டப்பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் திருச்செந்தூரில் நடந்தது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தை கலெக்டரின் நேர்முக உதவியாளர் வீரராகவன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் இசக்கியப்பன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார அலுவலர் தங்கமுனியம்மாள் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புறப்பட்ட ஊர்வலத்தில், டிபி ரோடு கற்றிலின் இனிமை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்கள் தேசிய தலைவர்கள் போன்று மாறுவேடமணிந்து கலந்து கொண்டு விழிப்பு ணர்வு நோட்டீஸ் வினியோகித்தனர். மேலும் சத்துணவுத்திட்டம், அங்கன்வாடி பணியாளர்களால் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. முன்னதாக, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வரையப்பட்டிருந்த வாக்காளர் விழிப்புணர்வு ரங்கோலி அனைவரையும் கவர்ந்தது. ஏற்பாடுகளை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாம்பாள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.