சிதம்பரம், மார்ச் 26: சிதம்பரம் காசுக்கடை தெரு அருகே உள்ள நெல்லுக்கடை தெருவில் நேற்று முன்தினம் ஒரு வீட்டில் உள்ள பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை நீக்க நகராட்சி ஊழியர்கள் அதனை சீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் குழாய் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை நெல்லுக்கடை தெருவில் சேதமடைந்த குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறி தெரு வெள்ளக்காடாகியது. நகரில் பாதி தெருக்களுக்கு குடிநீர் வராத நிலையில் நெல்லுக்கடை தெருவில் குடிநீர் ஆறாக ஓடியது.தகவல் அறிந்த நகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து சேதமடைந்த பகுதியை சீரமைத்தனர். நகரில் பாதாள சாக்கடை விரிவாக்கப் பணிகள் நடப்பதால் நிறைய இடங்களில் குடிநீர் குழாய்கள் சேதமடைந்து குடிநீர் கசிவு ஏற்படுவதும், குடிநீரில் கழிவு நீர் கலப்பதும் வாடிக்கையாகிவிட்டது. குடிநீர் குழாய்கள் சேதமடைவது குறித்து மாறி மாறி நகராட்சியும், குடிநீர் வடிகால் வாரியமும் ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்தி வருகின்றனர்.