×

கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தீக்குளித்து தற்கொலை

சென்னை, மார்ச் 26:   கணவன் இறந்த விரக்தியில்  மனைவி தீக்குளித்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.பம்மல், முத்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் (55). இவரது மனைவி அருணா (50). இவர்கள் அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.இந்நிலையில், சில வருடங்களுக்கு முன் இவர்களது மகள் இறந்து விட்டார். இந்நிலையில உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஸ்ரீராம், கடந்த சில மாதங்களுக்கு முன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 மகள், கணவன் அடுத்தடுத்து இறந்த துக்கத்தில் இருந்த அருணா, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த அருணா,  நேற்று  காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீ கொளுந்துவிட்டு எரிய தொடங்கியதும் அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்  பக்கத்தினர், அவரது உடலில் பற்றியிருந்த தீயை அணைத்தனர்.ஆனாலும், உடல்முழுவதும் கருகி உயிருக்கு போராடினார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சங்கர் நகர் போலீசார் விரைந்து வந்தனர். அதற்குள் தீயில் கருகி அருணா உயிரிழந்தார். அருணாவின் உடலை போலீசார் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை