சிவகங்கை, மார்ச் 22: சிவகங்கை மக்களவை தொகுதி மற்றும் மானாமதுரை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட கடந்த மூன்று நாட்களாக ஒரு வேட்பாளர் கூட மனுத்தாக்கல் செய்யவில்லை. தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக ஏப்.18ல் மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் 10ம் தேதி வெளியிடப்பட்டு அன்றே தேர்தல் விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டன. வேட்புமனுத்தாக்கல் கடந்த 19ம் தேதி தொடங்கி மார்ச் 26 வரை நடக்கிறது. வேட்பு மனு பரிசீலனை மார்ச் 27ம் தேதியாகும். மார்ச் 29ம் தேதி மனு வாபஸ் பெற கடைசி நாளாகும். சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை மக்களவை தொகுதி மற்றும் மானாமதுரை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிட சிவகங்கை கலெக்டர் அலுவலகம், சிவகங்கை ஆர்டிஓ அலுவலகம், மானாமதுரை இடைத்தேர்தலில் போட்டியிட மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் துணை அலுவலர் ஆகிய இருவரிடம் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் 19 முதல் நேற்று வரை மூன்று நாட்களில் சுயேச்சைகள், அரசியல் கட்சியினர் உள்பட ஒருவர் கூட மனுத்தாக்கல் செய்யவில்லை. இன்று(மார்ச் 22) மற்றும் மார்ச் 25, மார்ச் 26 ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே மனுத்தாக்கல் செய்யமுடியும். இன்று அதிமுக சார்பில் மானாமதுரை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளார்.