சிவகங்கை, மார்ச் 22: வங்கிகளில் கூடுதல் பணபரிவர்த்தனை செய்தால் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவினம் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் ஜெயகாந்தன் முன்னிலை வகித்தார். தேர்தல் செலவின பார்வையாளர்கள் விவேக்பிஉமாப், சத்தியபிரகாஷ்ஆர்சிங் தலைமை வகித்து பேசியதாவது: தேர்தல் விதிமீறல் இல்லாதவாறு ஒவ்வொரு அலுவலரும் கண்காணித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். கிராமப்பகுதிகளிலுள்ள கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள் 24மணி நேரமும் தங்கள் பகுதிகளில் ஏதேனும் தேர்தல் விதிமீறல் உள்ளதா என்பதை கண்காணித்து அவ்வாறு ஏதேனும் கண்டறிந்தால் உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.
வர்த்தக நிறுவனங்களில் அதிகளவு பரிசுப் பொருட்கள் வாங்குவதை கண்டறிந்தால் நிறுவன உரிமையாளர் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வங்கிகளில் யாரேனும் அதிகளவில் பணப்பரிவர்த்தனை செய்தால் அவர்களை கண்காணித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். உள்ளூர் தொலைக்காட்சிகளில் வெளியிடப்படும் தேர்தல் குறித்த விளம்பரங்கள் அனுமதி பெற்று வெளியிட வேண்டும். திருமண மண்டபங்களில் தேர்தல் தொடர்பான பணிக்கு அரசு அனுமதி பெற வேண்டும். வால்போஸ்டர், துண்டு பிரசுரங்கள் பயன்படுத்த அனுமதி பெற வேண்டும் என்று கூறினர்.
இக்கூட்டத்தில் எஸ்பி ஜெயச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, ஏடிஎஸ்பி மங்களேஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.