காளையார்கோவில், மார்ச் 22: காளையார்கோவிலில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. 2019ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்குச் சதவீதத்தை அதிகப்படுத்தவும் பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியவும் இயந்திரத்தின் (விவிபிஏடி) செயல்பாடு குறித்தும், வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, சிவகங்கை சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரி தலைமையில் டூவீலர் பேரணி நடைபெற்றது. இதில் காளையார்கோவில் வட்டாட்சியர் சேதுநம்பு மற்றும் வட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள், காளையார்கோவில் வருவாய்த்துறை அதிகாரி மாரிமுத்து மற்றும் வருவாய்த்துறை அதிகாரி, கிராம நிர்வாக அலுவலர் ரத்தினம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர். பேரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில் சென்று பஸ் நிலையம் வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது.