×

சுரண்டை அருகே கார், பைக் ேமாதல்: ஒருவர் பலி

சுரண்டை, மார்ச் 22: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள குப்பனாபுரத்தை சேர்ந்த செல்லப்பா மகன் பெரிய கோட்டைசாமி(38). இவர் கேரளாவில் இரும்பு கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் கேரளாவில் இருந்து பைக்கில் செங்கோட்டை வழியாக வந்து ஊருக்கு கொண்டிருந்தார். சுரண்டை அருகே பரங்குன்றாபுரம் பகுதியில் வரும்போது, 11ம் வகுப்பு மாணவர் சுப்பையாபாண்டியன் மகன் மாலன்(18) என்பவர் பெரியகோட்டைசாமியிடம் ராஜபாண்டி செல்ல வேண்டி இருப்பதால் வழியில் வீ.கே.புதூரில் இறங்கிக் கொள்வதாக கூறி லிப்ட் கேட்டுள்ளார். இருவரும் கலிங்கப்பட்டி விலக்கு அருகில் வரும்போது எதிரே வந்த கார், பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் பெரிய கோட்டைசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் பயணம் செய்த ராயகிரியை சேர்ந்த  இசக்கிமுத்து, அவரது மனைவி லட்சுமி பிரபா, தந்தை ராமச்சந்திரன், தாய் இசக்கியம்மாள், சித்தப்பா பாலசுப்பிரமணியம், குழந்தைகள் கார்த்திகாவதி, வெங்கட்பிரபு ஆகிய  7 பேர் மற்றும் மாணவர் மாலன் உட்பட 8 பேர் காயமடைந்தனர்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் வீ.கே.புதூர் போலீசார் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இறந்த பெரியகோட்டைசாமி உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வீ.கே.புதூர் எஸ்.ஐ ஜெயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இசக்கிமுத்து குடும்பத்தினர் பழையகுறிச்சி அருகிலுள்ள குலதெய்வ கோயிலுக்கு சென்று விட்டு ராயகிரிக்கு திரும்பி வரும்போது கார் விபத்தில் சிக்கியது. இறந்த பெரிய கோட்டைசாமிக்கு வெயிலாட்சி என்ற மனைவியும், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

Tags :
× RELATED திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் வசந்த உற்சவம்