வார்டுகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலில் ஆட்சேபனை குறைபாடுகளை சரி செய்து 25ம் தேதிக்குள் அறிக்கை தர வேண்டும் உள்ளாட்சிதுறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

திருச்சி, மார்ச்.22: திருச்சி மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் உள்ளாட்சி துறை அலுவலர்களுடான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் சிவராசு தலைமை வகித்து பேசியதாவது: சாதாரண உள்ளாட்சி தேர்தல்கள்-2019 திருச்சி மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், எம்பிக்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இதுகுறித்து 14 ஊராட்சி ஒன்றியங்கள், திருச்சி மாநகராட்சி, துறையூர், மணப்பாறை, துவாக்குடி ஆகிய மூன்று நகராட்சிகள் மற்றும் 16 பேரூராட்சிகளில் வெளியிடப்பட்ட 3,437 வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஊரகம் மற்றும் நகர்புற அலுவலர்கள் வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் ஆய்வு செய்தும், வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து ஆட்சேபனைகள் வரும் பட்சத்தில் அக்குறைபாடுகளை சரி செய்தும், நிறைவு செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியல்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் தொடர்பான தொடர்புபடுத்தும் பட்டியல்கள் ஆகியவற்றை வருகிற மார்ச் 25ம் தேதிக்குள் கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் (தேர்தல்) ஒப்படைக்க வேண்டும்.

வாக்குச்சாவடி மையங்களில் பட்டியல்களை தயாரிக்கும்போது வாக்குச்சாவடி மையம், தனியார் கட்டிடத்தில் அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படின் அக்கட்டிடம் அரசியல் பிரமுகர்களுக்கு சொந்தமான உள்ளாட்சி அமைப்புகளின் வேட்பாளராக அல்லது அவர்களின் உறவினர்களுக்கு சொந்தமான கட்டிடமாக இருக்க கூடாது. கட்டிடத்தின் உறுதி மற்றும் அடிப்படை வசதிகள் ஆராய்ந்து தெரிவிக்க வேண்டும். மத உணர்வுகளை தூண்டும் விதமான இடங்களில் வாக்குச்சாவடி மையங்களை அமைக்கக்கூடாது. கடந்த 2011 தேர்தல்களை அடிப்படையாக கொண்டும் தற்போதைய சூழலை கவனத்தில் கொண்டும் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை கண்டறிந்து ஊரக மற்றும் நகர்புற அலுவலர்கள் அறிக்கை கொடுக்க வேண்டும். மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், கலெக்டர் நேர்முக உதவியாளர்கள் பாஸ்கரன் (தேர்தல்), லதா (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) தண்டபாணி உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: