100 சதவீதம் வாக்களிக்க கோரி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி துறையூரில் நடந்தது

துறையூர், மார்ச் 22:  பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட துறையூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் துறையூர் பாலக்கரையில் இருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை  வட்டாட்சியர் பிரகாஷ் தலைமை வகித்து துவக்கி வைத்தார். இந்த திருச்சிரோடு வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தை வேரணி வந்தடைந்தது. நகராட்சி ஆணையர் நவேந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் தனலட்சுமி, தேர்தல் துணை வட்டாட்சியர் ஆனந்த், நகராட்சி மேலாளர் பாலகிருஷ்ணன், நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், துறையூர் ஜமீந்தார் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். பேரணியில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். கண்ணியத்துடன் வாக்களிக்க வேண்டும். கடமை தவறாது வாக்களிக்க வேண்டும். உங்கள் எதிர் காலத்தின் குரல் வாக்கு என்பதை எடுத்துரைக்கும் போன்ற வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை சைக்கிளில் கட்டிக்கொண்டு சென்றனர். பேரணி நிறைவடைந்ததும் தாலுகா அலுவலகத்தில் உள்ள  “எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து பேனரில் அதிகாரிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் கையெழுத்திட்டனர்.

Related Stories: