மன்னச்சநல்லூர், மார்ச் 22: மண்ணச்சநல்லூர் பகுதியில் கால்நடைகளுக்கு தீவனம் வாங்க முடியாமல் விவசாயிகள் திண்டாடி வருவதால் அந்த கால்நடைகளை விவசாயிகள் விற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மண்ணச்சநல்லூர் பகுதியில் விவசாயிகள் பசுமாடு மற்றும் வெள்ளாடுகளை பெருமளவில் வளர்த்து வருகின்றனர். இதேபோல் விலையில்லா வெள்ளாடுகளையும் வளர்த்து வருகின்றனர். இந்த பகுதியில் பருத்தி, நிலக்கடலை மக்காச்சோளம் மற்றும் பயிர் வகையான பாசிப்பயிர், மொச்சைபயிர், தட்டைபயிர் என இந்த பகுதியில் விவசாயம் செய்து கால்நடைகளை வளர்த்து வந்தனர். மழை இல்லாத காரணத்தால் எந்த விவசாயமும் செய்ய முடியவில்லை. மேலும் இந்த இப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையுள்ளதால் கால்நடைகளுக்கு எந்த தீவனமும் கிடைக்காததால் கால்நடைகளை விற்று பிழைப்பு நடத்த வேண்டியுள்ளது என அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பள்ளிவிடை பகுதி விவசாயி பார்த்தசாரதி ( 69) கூறியதாவது: எனது சொந்த ஊர் தேனூர். நாற்பது ஆண்டுகளுக்கு முன் பள்ளிவிடை பகுதியில் வசித்து வருகிறோம். அந்த காலத்தில் மழை இல்லை என்றால் கரவெளி என்று அழைக்கப்படும் டெல்டா பகுதிகளுக்கு சென்று நெற்கதிர் அறுத்து அடிக்கும் பணிக்கு செல்வோம். அதற்கு கூலியாக வைக்கோல், நெல் பெற்று எங்கள் கால்நடைகளுக்கு வைக்கோலும், எங்களுக்கு நெல்லும் கிடைத்தது.