மண்ணச்சநல்லூர் அருகே ஒருதலை காதலால் விபரீதம் கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து வாலிபர் கைது

மண்ணச்சநல்லூர், மார்ச் 22:  மண்ணச்சநல்லூர் அருகே கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த வாலிபர் மாணவி காதலை ஏற்காததால் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம்   சிறுகாம்பூர் செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் நீலமேகம் மகள் வினோதினி (20). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பிசிஏ 2ம் ஆண்டு படித்து வருகிறார். இதே ஊரில் உள்ள காவல்காரத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜு மகன் மணீஷ் (25). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை எதுவும் இல்லாமல் ஊர் சுற்றி வருகிறார். இந்நிலையில் வேலை இல்லாத மணீஷ் கல்லூரி மாணவியின் அழகில் மயங்கி ஒரு தலையாக காதலித்து வந்தார். தனது காதலை வினோதினியிடம் தெரிவித்தார். ஆனால் வினோதினி காதலை ஏற்கவில்லை. பலமுறை காதலை சொல்லியும் வினோதினி மணீசின் காதலை ஏற்காததால் ஆத்திரமடைந்தார்.

இந்நிலையில் நேற்று வினோதினி சிறுகாம்யூரில் உள்ள முருகன் கோயிலுக்கு பால்குடம் சுமந்து சென்றார். அப்போது மணீஸ் வினோதினியிடம் மீண்டும் தனது காதலை தெரிவித்துள்ளார். காதலுக்கு வினோதினி மறுத்ததால் ஆத்திரமடைந்த மணீஸ் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வினோதினியின் கழுத்தில் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் வினோதினி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அக்கம்பக்கதில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து புகாரின் பேரில் மணீசை வாத்தலை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: