சேலம், மார்ச் 22: பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், தமிழக ரயில்வே போலீஸ் சார்பில் காவலன் மொபைல் ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. இதை பெண்கள் எளிதாக பயன்படுத்தி கொள்ளலாம். இந்த காவலன் மொபைல் ஆப் பதிவிறக்கம் செய்வது குறித்து, நேற்று சேலம் ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், கொண்டலாம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று, விழிப்புணர்வு துண்டுபிரசுரத்தை ரயில் நிலையம் வந்த பயணிகளிடம் வழங்கினர். இவர்களுடன், சேலம் ரயில் நிலைய காவலர்களும் சென்று, ரயில் பயணிகளிடம் பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என்றும், புகார்கள் இருப்பின் உடனே காவலன் ஆப்பை பயன்படுத்தி புகார்கள் தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தினர்.