மேச்சேரி, மார்ச் 22: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அத்திப்பள்ளி பல்லூரை சேர்ந்தவர் ஜெகநாதன்(31). இவரது கார் டிரைவராக சூளகிரி அடுத்த உத்தனப்பள்ளியை சேர்ந்த முனியப்பன் (24) வேலை செய்து வருகிறார். கடந்த 13ம் தேதி திருமண விழாவிற்காக ஜெகநாதன் குடும்பத்தை கர்நாடகா மாநிலத்தில் இறக்கி விட்ட முனியப்பன், மீண்டும் ஓசூர் சிப்காட் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் நின்றிந்த 3 பேர் காரை நிறுத்தினர். தங்களது நண்பருக்கு கோவையில் விபத்து ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும், அவரை பார்க்க செல்ல வேண்டும் என கூறி வாடகை பேசியுள்ளனர். இதையடுத்து மூன்று பேரையும் காரில் ஏற்றிக்கொண்டு முனியப்பன் கிளம்பினார். தேசிய நெடுஞ்சாலையில் சென்றால் தாமதமாகும், மாற்று வழியில் விரைவாக சென்று விடலாம் என 3 பேரும் கூறியதை அடுத்து, முனியப்பன் காரை பாலக்கோடு, பென்னாகரம் வழியாக மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூர் வந்துள்ளார். அப்போது அங்குள்ள அரசு பள்ளி அருகே காரை நிறுத்தி 3 பேரும், சிறிது நேரம் துங்கி விட்டு செல்லலாம் என கூறியுள்ளனர். இதையடுத்து டிரைவர் முனியப்பன், அவர்களுடன் சேர்ந்து காரினுள் தூங்கியுள்ளனர். அதிகாலையில் தூக்கத்தில் இருந்த டிரைவர் முனியப்பன் கழுத்தில், பிரேக் ஒயரை சுற்றி 3 பேரும் சேர்ந்து கொலை செய்ய முயற்சித்தனர். திடுக்கிட்டு எழுந்த முனியப்பன், சத்தம் போட்டுள்ளார். ஆனால் கார் கதவு மூடியிருந்ததால், அவரது அலறல் சத்தம் வெளியே கேட்கவில்லை.