தஞ்சை, மார்ச் 22: தஞ்சை சட்டமன்ற தொகுதிக்கு என்று தனியாக பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டுமென தேர்தல் நடத்தும் அதிகாரி சுரேஷிடம் தேர்தல் செலவின பார்வையாளர் மண்ட்குமார்தாஸ் உத்தரவிட்டார்.
தஞ்சை நாடாளுமன்ற தேர்தலுடன் தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. இதையடுத்து நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றை பார்வையிட தேர்தல் செலவின பார்வையாளர்கள் 2 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய 3 சட்டமன்ற தொகுதிக்கு மண்ட்குமார்தாஸ், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிக்கு பிரகாஷ்நாத்பன்வால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கும் தேர்தல் செலவின பார்வையாளராக மண்ட்குமார்தாஸ் உள்ளார். இந்நிலையில் தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான பணிகளை ஆய்வு செய்ய தஞ்சை ஆர்டிஓ அலுவலகத்துக்கு மண்ட்குமார்தாஸ் நேற்று வந்தார். பின்னர் தொகுதி நிலவரம் குறித்து தஞ்சை சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியான ஆர்டிஓ சுரேஷிடம் கேட்டார்.
அப்போது தஞ்சை பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக்குழு ஆகியவை எவ்வாறு செயல்படுகிறது என்று கேட்டார். இதன்பின்னர் தஞ்சை சட்டமனற தொகுதிக்கு என்று தனியாக செயல்படும் பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ குழுவினரை அழைக்குமாறு தெரிவித்தார். இதற்கு தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு என்று நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுவினர் தான் உள்ளனர். தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு என்று தனியாக குழு அமைக்கவில்லையென ஆர்டிஓ சுரேஷ் கூறினார். இதைகேட்ட தேர்தல் செலவின பார்வையாளர் மண்ட்குமார்தாஸ், தஞ்சை நாடாளுமன்ற தொகுதி கண்காணிப்பு குழுவினர் செயல்படுவதுபோல் தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிக்கு என்று தனியாக பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ குழுவினரை அமைக்க வேண்டும்.
இந்த குழுவினர் தஞ்சை சட்டமன்ற தொகுதிக்கு உள்ளிட்ட பகுதிகள் எல்லாவற்றையும் அதிரடியாக சென்று ஆய்வு நடத்த வேண்டும். இந்த குழுவினர் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சுழற்சி முறையில் பணி வழங்க வேண்டும். அப்போது தான் தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறப்படுவதை கண்காணிக்க முடியும். தேர்தல் விதிமுறை மீறும் அரசியல் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். தஞ்சை நாடாளுமன்ற கண்காணிப்பு குழுவினர் வழக்கம்போல் தங்களது பணிகளை மேற்கொள்ளலாம். அதேநேரத்தில் தஞ்சை சட்டமன்ற தொகுதி எல்லைக்குள் புதிதாக ஏற்படுத்தப்படும் கண்காணிப்புக்குழு கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல் செலவின பார்வையாளர் மண்ட்குமார்தாஸ் கூறினார்.