×

ஆலங்குடி அருகே கட்டிட மேற்கூரை பெயர்ந்து விழுந்து சமையலர் படுகாயம்

ஆலங்குடி, மார்ச் 22:  ஆலங்குடி அருகே நெம்மக்கோட்டையில் சமையல் செய்யும் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் சமையலர் பலத்த காயம் அடைந்தார். ஆலங்குடி அடுத்த நெம்மக்கோட்டையில் அரசுதொடக்கப்பள்ளி உள்ளது.  இப்பள்ளியில் சமையல் செய்யும் கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால், அப்பகுதி பொதுமக்கள் சம்மந்தப்பட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, சம்மந்தப்பட்ட நிர்வாகத்தினர், பழுதடைந்த கட்டிடத்தின் அருகே புதிய சமையல் கட்டிடம் கட்டினர்.

கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படாததால், பழைய கட்டிடத்திலேயே பள்ளி மாணவர்களுக்கு சமைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளி மாணவர்களுக்கு அரசடிப்பட்டியை சேர்ந்த ஆரோக்கியசாமி மனைவி நட்சத்திரம் (56) என்பவர் பள்ளி மாணவர்களுக்கு சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து நட்சத்திரத்தின் தலை மற்றும் முதுகில் விழுந்தது.
இதனால், நட்சத்திரம் அலறினார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நட்சத்திரத்தை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : kitchen ,Alangudi ,
× RELATED தேர்தல் பணியில் ஈடுபட்ட எஸ்எஸ்ஐ,...