உத்திரமேரூர், மார்ச் 22: உத்திரமேரூர் அடுத்த குண்ணங்குளத்தூர் கிராமத்தில் உள்ள மங்களாம்பிகை உடனுறை கும்பேஸ்வரர் கோயிலில், 67ம் ஆண்டு பங்குனி உத்திர திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர், சுவாமிக்கு சந்தனக் காப்பு அலங்காரத்துடன், பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலை கோயில் வளாகத்தில் ஆன்மிக சொற்பொழிவு, பரத நாட்டியம், கரகாட்டம், பொய்கால் குதிரை உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட மங்களாம்பிகை உடனுறை கும்பேஸ்வரர் சுவாமிக்கு மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. திருக்கல்யாணம் முடிந்தபின், கோயில் வாளகத்தில், சுவாமிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இரவு 11 மணியளவில் சுவாமி ரிஷப வாகனத்தில் கிராமம் முழுவதும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் அனைவருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்தனர். விழாவையொட்டி சுற்றியுள்ள கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமியினை வழிபட்டு சென்றனர்.