×

அண்ணாநகர் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து செல்வோரிடம் வழிப்பறி: முகமூடி கும்பல் அட்டகாசம்

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர், அமைந்தகரை உள்பட பல்வேறு இடங்களில் சாலையில் நடந்து செல்வோரை தாக்கி முகமூடி கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். நாகலாந்து மாநிலத்தை சேர்ந்த செபன்தன் (29), சுசி (24) இருவரும் அண்ணாநகர், கீழ்நெடுவான்கரையில் தங்கி அதே பகுதியில் உள்ள ஐஸ்கிரீம் கடையில் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி அளவில் வேலை முடிந்து இருவரும் அதே பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெரு வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த முகமூடி கும்பல்  கத்தியை காட்டி மிரட்டி இவர்களிடமிருந்த 2 செல்போன்கள் மற்றும் ரூ.6500 பணத்தை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோதும் தேர்தல் நேரம் என்பதால் எந்த நடிவடிக்கையும் எடுக்க முடியாது என்று சொல்லி புகார் கொடுக்க வந்த வாலிபர்களை விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதே பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி அளவில் அந்த வழியாக வந்த கால் டாக்சியை நிறுத்தி டிரைவர் பிரபு (25) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி இதே முகமூடி கும்பல் ரூ.6 ஆயிரம் பணத்தை பறித்து சென்றனர். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் மக்கள் பீதியில் உள்ளனர்.

Tags : Annaankar ,gangsters ,
× RELATED மராட்டியத்தில் குண்டர்கள் ஆட்சி :சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கருத்து