தாம்பரம்: தாம்பரத்தில் பங்குனி உத்திர தேர் திருவிழா நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் பெற்று சென்றனர். தாம்பரம், கடப்பேரி மௌலானா நகர் பச்சை மலைச்சாரல் பகுதியில் சக்தி வேல்முருகன் கோயில் உள்ளது. சுமார் 40 ஆண்டு பழமை வாய்ந்த இக்கோயிலில், 41வது ஆண்டு பங்குனி உத்திர திருத்தேர் விழா கடந்த 12ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முதல் நாள் அன்றே சக்திவேல் முருகனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து 11 நாட்கள் விரதம் இருந்து நேற்று காலை மஞ்சள் மாவு, மிளகாய் இடித்தல், மிளகாய் பொடி அபிஷேகம் ஆகியவை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அலகு குத்தி ஊர்வலமாக சென்று, தாம்பரம் சானடோரியம் ஜிஎஸ்டி சாலையில் மெப்ஸ் ஏற்றுமதி வளாகத்தின் முன்பு பறக்கும் காவடி செய்து வேண்டுதலை நிறைவேற்றினார்கள். இதில், தாம்பரம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் பெற்று சென்றனர்.