சென்னை: இந்த 5 ஆண்டு காலத்தில் ஒவ்வொருவரும் மோடி அரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தயாநிதி மாறன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட கொளத்தூர், துறைமுகம், வில்லிவாக்கம், எழும்பூர், திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வில்லிவாக்கத்தில் நேற்று நடந்தது. சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறன், வடசென்னை தொகுதி வேட்பாளர் கலாநிதி வீரசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் தயாநிதி மாறன் பேசியதாவது: இந்த 5 ஆண்டு காலத்தில் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் மோடி அரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீங்களும் உங்கள் சொந்தக்காரங்களும், மகன்களுக்கும் வேலை வாய்ப்பு கிடையாது. பிஎஸ்என்எல் மூட வேண்டியதாச்சு. ஏதாவது ஒரு வழியில் பார்த்தீர்கள் என்றால் அனைவரும் ஏதாவது ஒரு வழியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.