தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி வாலிபர் பலி

சென்னை: தண்டவாளத்தை கடந்தபோது மின்சார ரயில் மோதி வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே கடந்த 5ம் தேதி தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ஒருவர் மின்சார ரயில் மோதி சம்பவ இடத்திலே பலியானார். இதையடுத்து அங்கிருந்த ரயில் பயணிகள் நடந்த சம்பவம் குறித்து எழும்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த வாலிபர் யார்? என்று, அடையாளம் தெரியாததால் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சென்னை எம்எம்டிஏ காலனியை சேர்ந்த சரவணன் (37) என்பதும், தனியார் தொலைக்காட்சி நிறுவன மேலாளர் என்பதும் தெரியவந்தது.

Related Stories: