பைக் மீது லாரி மோதி கல்லூரி மாணவன் பலி

திருவொற்றியூர்: மாதவரத்தில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் பரிதாபமாக இறந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரை தேடி வருகின்றனர். அம்பத்தூர் வெங்கடாபுரம் பழைய டவுன்ஷிப் ரோடு பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார். அதிமுக 81வது வட்ட செயலாளர். இவரது 2வது மகன் கௌதம் (17). அண்ணா நகரிலுள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை அம்பத்தூரில் இருந்து சென்னை, சவுகார்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல தனது அண்ணன் ராகுல் என்பவருடன் கௌதம் பைக்கில் அமர்ந்து சென்றார். மாதவரம் ரவுண்டானா அருகே ஜிஎஸ்டி சாலை வந்தபோது செங்குன்றத்திலிருந்து மாதவரம் நோக்கி வந்த சிமென்ட் கற்கள் ஏற்றி வந்த லாரி, இவர்கள் ஓட்டி வந்த பைக் மீது வேகமாக மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கௌதம் லாரியின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சடலத்தை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில், ராகுல் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து ஏற்படுத்திய டிரைவர் லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: