×

விடுமுறை கூட்ட நெரிசலை தவிர்க்க பகல் நேரங்களில் கூடுதல் ரயில்கள்

ராமநாதபுரம், மார்ச் 21: மதுரை-ராமேஸ்வரம் மார்க்கத்தில் பகல் நேரங்களில் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு காலை, நண்பகல், மாலை நேரங்களிலும், இதேபோல் ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு 3 வேளைகளிலும் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் வழக்கமாக கூட்டம் அதிகமாக இருக்கும். அதனால் ரயில் பெட்டிகளின் கழிவறைகள், ஏறும், இறங்கும் வழிகள், நடந்து செல்லும் இடங்கள் என அனைத்திலும் பொதுமக்கள் அமர்ந்து பயணிக்கின்றனர். கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் மானாமதுரை, ராமேஸ்வரம் அகல ரயில் பாதையில் ரயில்கள் இயக்க துவங்கியபோது மதுரை, ராமேஸ்வரம் மார்க்கத்தில் காலை, மாலை என இரண்டு பயணிகள் ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. கடந்த 2009 முதல் நள்ளிரவு ரயில் இயக்கப்பட்டது. பின்பு அந்த ரயில் நண்பகல் ரயிலாக மாற்றப்பட்டது. இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்க தொடங்கி 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இந்த 3 பயணிகள் ரயிலே மதுரை-ராமேஸ்வரம் மார்க்கத்தில் இயக்கப்படுகிறது. இது பயணிகளுக்கு போதுமானதாக  இல்லை.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மார்க்கத்தில் கூடுதலாக பயணிகள் ரயில்கள் இயக்க வேண்டும். தற்போது இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என மாவட்ட மக்கள், வர்த்தக சங்கத்தினர், ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது. தற்போது தேர்தல் நேரம் என்பதால் பொதுமக்கள் இந்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து சாத்தான்குளம் முபாரக் கூறுகையில், குறைந்த கட்டணத்தால் அனைவரும் ரயில் பயணத்தை அதிகம் விரும்புகின்றனர். பல மாதங்களாக ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை செல்லும் அனைத்து ரயில்களிலும் சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பகல் நேரங்களில் ராமநாதபுரம் ரயில்நிலையத்தில் அதிகளவு கூட்டம் உள்ளது. தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை வேறு விடப்பட உள்ளது. இதனால் இந்த மார்க்கத்தில் பகல் நேரத்தில் கூடுதலாக ரயில்களை இயக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர் இந்த முறை கண்டிப்பாக கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Tags : holidays ,
× RELATED பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல்...