×

அறந்தாங்கி அருகே நாகுடியில் மாடு, குதிரை வண்டி பந்தயம்

அறந்தாங்கி, மார்ச் 21: அறந்தாங்கி அருகே நாகுடியில் மாடு, குதிரை வண்டி பந்தயம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்த களக்குடி அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, களக்குடி-நாகுடி வர்த்தக சங்கம் சார்பில் மாட்டுவண்டி-குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. மாட்டு வண்டி பிரிவில் 4 பிரிவுகளாகவும், குதிரை வண்டிப் பிரிவில் நடுக்குதிரை பிரிவாகவும் பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தை புதுக்கோட்டை மாவட்ட ரேக்ளா ரேஸ் தலைவர் சிங்கவனம் ஜமீன்தார் ராமசாமி மெய்க்கன் கோபாலர் துவக்கி வைத்தார். பெரியமாடு பிரிவில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசாக ரூ.68 ஆயிரத்து 214ம், கரிச்சான்மாடு பிரிவில் வென்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசாக ரூ.51 ஆயிரத்து 914-ம், நடுமாடு பிரிவில் வென்ற மாட்டுவண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசாக ரூ.59 ஆயிரத்து 714ம், பூஞ்சிட்டு மாடு பிரிவில் வென்ற மாட்டுவண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரூ.45 ஆயிரத்து 14ம் பரிசாக வழங்கப்பட்டன. பந்தயத்திற்கான ஏற்பாடுகளை களக்குடி-நாகுடி வர்த்தக சங்கத் தலைவர் பழ.சுப்பையா, செயலாளர் ராமன், பொருளாளர் முத்துக்குமார் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். பந்தயத்தை ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்தனர்.

Tags : Aranthangi ,Nagathudi ,
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு