வேளச்சேரி: வேளச்சேரியில் வாங்கிய 200 பணத்தை திருப்பி தராததால் முதியவரை கல் மற்றும் உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மானாமதுரையை சேர்ந்தவர் வினோத் (23). சென்னை வேளச்சேரி அடுத்த நன்மங்கலம் வீரமணி நகர் டாஸ்மாக் பாரில் தங்கி வேலை செய்து வந்தார். இவருக்கும் மேடவாக்கம் பஜார் பகுதியில் பிளாட்பாரத்தில் தங்கி பழைய பாட்டில்களை சேகரித்து விற்கும் வேலாயுதம் (60) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது வினோத், வேலாயுதத்திற்கு 200 கடன் கொடுத்துள்ளார். கடன் வாங்கிய வேலாயுதம் கொடுக்காமல் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று மதியம் வேலாயுதம் நன்மங்கலம் டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளார். அப்போது, கொடுத்த கடனை வினோத் கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு முடிந்துள்ளது. அப்போது, வினோத் கீழே கிடந்த கல் மற்றும் உருட்டு கட்டையால் வேலாயுதத்தை தாக்கியுள்ளார். இதில் தலையில் படுகாயமடைந்த வேலாயுதம் மயங்கி கீழே சாய்ந்தார். உடனே வினோத் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். வேலாயுதம் மயங்கி கிடப்பதை இதை பார்த்த, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு நேற்று மாலை வேலாயுதம் இறந்தார். தகவலறிந்து பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வேலாயுதம் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியில் தலைமறைவாக இருந்த வினோத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.