ஈரோடு, மார்ச் 21: கூட்டுறவு ஒன்றியம் சார்பில் தங்கநகை மதிப்பீட்டாளர் பயிற்சி விரைவில் துவங்கப்பட உள்ளது. ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகளுடன் தங்கநகை மதிப்பீட்டாளர் பயிற்சியும் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து மேலாண்மை நிலைய துணைப்பதிவாளரும், முதல்வருமான மணி கூறியதாவது:நகைக்கடைகளிலும், அடகு கடைகளிலும், வங்கிகளிலும் தங்கநகை அதிகளவில் புழக்கத்தில் உள்ளது. தங்கத்தை மதிப்பீடு செய்து அதன் தரத்தை கண்டறிய வேண்டியது மிகவும் அவசியம்.. இதற்கு அறிவியல் பூர்வமான பயிற்சி கட்டாயம் தேவை. இளைய தலைமுறையினர் தங்கத்தை பற்றிய விழிப்புணர்வு பெறவும், இதன் மூலம் வேலைவாய்ப்பு பெறவும் சுயதொழில் வழங்கவும் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியின்போது அடிப்படை உலோகவியல், உலோகத்தின் பயன்பாடு, தங்கத்தை பற்றிய அடிப்படை விபரம், தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, தங்கத்தை அழித்தும், அழிக்காமலும் தரம் அறியும் முறை, நகைகளின் வகைகளை கண்டறிதல், வங்கிகளில் நடைக்கடன் வழங்கும் முறை, ஹால்மார்க், அடகு பிடிப்போர் நடைமுறைச்சட்டம் மற்றும் விதிகள் போன்ற பாடங்கள் வகுப்பறை பயிற்சியாக வழங்கப்படுகிறது.