×

கெங்கவல்லி அருகே கேஸ் கசிவால் தீவிபத்து குடிசை எரிந்து சாம்பல்

கெங்கவல்லி, மார்ச் 21: கெங்கவல்லி அருகே கேஸ் கசிவால் குடிசை வீட்டில் தீப்பற்றியதில் நகை, ₹40ஆயிரம் பணம், பொருட்கள் எரிந்து நாசமானது. வீரகனூர் அருகே லத்துவாடி ஊராட்சி மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமர். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செண்பாயி(40). இவர்களுக்கு 3 மகன், 1 மகள் உள்ளனர். இவர்கள் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். செண்பாயி கூலி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், கேஸ் அடுப்பில் சமைத்து முடித்து விட்டு, கவனக்குறைவால் சரியாக அணைக்காமல் இருந்துள்ளார். இதனால் கேஸ் கசிந்திருந்த நிலையில், மீண்டும் தோசை ஊற்ற அடுப்பை பற்ற வைத்தபோது தீ பற்றி எரிய தொடங்கியது. அதிர்ச்சியடைந்த செண்பாயி வீட்டில் இருந்த குழந்தைகளை அழைத்து கொண்டு வெளியே ஓடி தப்பினார்.

சிறிது நேரத்தில் மளமளவென தீ பரவி, வீடு முழுவதும் எரிய தொடங்கியது. அக்கம் பக்கத்தினர் தண்ணீர் ஊற்றியும், மண்ணை அள்ளி கொட்டியும் அணைக்க முயன்றனர். ஆனால், தீயை அணைக்க முடியாததால், கெங்கவல்லி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.  நிலைய அலுவலர் விஜயன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீ அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் அணைத்தனர். தீ விபத்தில், செண்பாயி வீட்டில் இருந்த நகை, ₹40 ஆயிரம் பணம், 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள், ஆவணங்கள் என அனைத்து ெபாருட்களும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து கெங்கவல்லி போலீசார், தாசில்தார் சுந்தரராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து, நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

Tags : fire cottage ,Kankavalli ,
× RELATED கெங்கவல்லியில் 5 நாட்கள் ஜமாபந்தி கூட்டம்