விஷம் குடித்து 2 பெண்கள் தற்கொலை

சங்கரன்கோவில், மார்ச் 21:  கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள  சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் வேலு மகள்  முருகேஸ்வரி (20). இவர், விருதுநகர் மாவட்டம் முறம்புவில் உள்ள மில்லில் வேலை  பார்த்து வந்தார். முருகேஸ்வரி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு சிகிச்சை எடுத்தும் பலனளிக்கவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர், நேற்று முன்தினம் காலை வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து  மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சங்கரன்கோவில்  அரசு மருத்துமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் குத்தாலிங்கம் மகள் இந்துமதி  (18). ஆலங்குளத்தில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்த இவர், தந்தையிடம் செல்போன் வாங்கி கேட்டுள்ளார். அவர் வாங்கி தராததால் மனமுடைந்து காணப்பட்ட இந்துமதி, நேற்று காலை தலைக்கு தேய்க்க வாங்கி வைத்திருந்த பேன் மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே இந்துமதி இறந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: