×

திமுக வேட்பாளருக்கு காந்திய சேவா மன்றம் ஆதரவு

ஸ்பிக்நகர், மார்ச் 21: தூத்துக்குடி மண்டல காந்திய சேவா மன்ற நிர்வாகிகள் கூட்டம் அத்திமரப்பட்டியில் நடந்தது. கிளை தலைவர் பால்துரை தலைமை வகித்தார். தூத்துக்குடி மண்டல காந்திய சேவா மன்ற நிர்வாகிகள் சுந்தரவேல், தேவராஜ், மஜீத், கருப்பசாமி, வின்சென்ட் உள்பட பலர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளராக காந்திய சேவா மன்ற நிறுவனர் ராஜேந்திரபூபதி பங்கேற்று பேசினார். தூத்துக்குடியை பொறுத்தவரை கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறை கட்டிடங்கள் மற்றும் பல பாலங்கள் திமுக ஆட்சியில் தான் கட்டப்பட்டு உள்ளன.

சாதாரண மக்களின் கோரிக்கைகள் உடனே பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. கால்வாய்களில் திறக்கப்படும் தண்ணீர் கடைசி குளத்தை அடைந்து கடைமடை பகுதிகள் பாயும் வரை முக்கியத்துவம் வழங்கப்பட்டது. இது போன்ற பல காரணங்களுக்காக வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தும், அவரது வெற்றிக்காக பொதுமக்களை சந்தித்து வாக்கு கேட்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில்  எம்எல்ஏக்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்த முடிவுசெய்யப்பட்டது.

Tags : candidate ,Gandhian Seva Foundation ,DMK ,
× RELATED மோடியிடமிருந்து இந்தியாவை...