×

வாணியம்பாடி அருகே ரிப்பனை பயன்படுத்தி கொடூரம் குடும்பத்தகராறில் இளம்பெண் கழுத்து இறுக்கி படுகொலை கணவன் கைது

வாணியம்பாடி, மார்ச் 21: வாணியம்பாடி அருகே குடும்பத் தகராறில் ரிப்பனால் கழுத்தை இறுக்கி மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த குள்ளப்பனூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாசம்(30). இவரது மனைவி வசந்தா(28). இவர்களுக்கு, அன்பரசி(2), புனிதா(1) என 2 மகள்கள் உள்ளனர். பிரகாசம், வாணியம்பாடியில் கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவிக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட குடும்ப சண்டையில், மனைவி வசந்தா கோபித்துக்கொண்டு, தனது உறவினர் வீடான ஒசூருக்கு சென்று அங்கேயே தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், இந்த தகவல் தெரிந்த கணவர் பிரகாசம் ஒசூருக்கு சென்று, மனைவியிடம் சமாதானமாகப் பேசி, தன்னுடன் வாழ சம்மதிக்க வைத்து, வாணியம்பாடிக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று கணவன், மனைவி இடையே மீண்டும் குடும்பத்தகராறு ஏற்பட்டது. அப்போது, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். ஆத்திரம் அடைந்த பிரகாசம் மனைவி வசந்தாவின் கழுத்தில் ரிப்பனால் இறுக்கி கொடூரமாக கொலை செய்ததாராம்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து பிரகாசத்தை நேற்று மாலை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : horoscope family ,Vaniyambadi ,
× RELATED வாணியம்பாடியில் பணப்பட்டுவாடா!:...