×

திருப்பத்தூரில் மகளை கொன்று விஷம் குடித்த பெண்ணும் சாவு

திருப்பத்தூர், மார்ச் 19: மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று, தானும் விஷம் குடித்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த கோனாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார்(45). இவரது மனைவி நீலா(35). இவர்களது மகள் பவதாரணி(4). பெங்களூரில் வேலை செய்து வந்த உதயகுமார், வெளிநாட்டு வேலைக்கு செல்ல பணம் வேண்டும் என்று மனைவியிடம் கேட்டாராம். இதற்காக நீலா, சின்னஉடையாமுத்தூர் கிராமத்தில் தனது தாய் வீட்டில் வழங்கிய நிலத்தை அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் அடகு வைத்து பணம் வாங்கி கணவரிடம் கொடுத்துள்ளார். ஆனால், உதயகுமார் வெளிநாட்டிற்கு செல்லாமல் கொடுத்த பணத்தை ஊதாரித்தனமாக பெங்களூரிலேயே செலவு செய்ததாக தெரிகிறது.

இந்நிலையில் ‘கடனை திருப்பிக்கொடு, அல்லது வட்டியாவது கொடு’ என நீலாவிடம் கடன் கொடுத்தவர் கேட்டுள்ளார். மேலும் கடந்த 17ம் தேதி கடனை தருமாறு மீண்டும் கேட்டுள்ளார். இதில் வேதனையடைந்த நீலா, அன்றிரவு தனது குழந்தை பவதாரணிக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் குடித்தார். இருவரும் மயங்கி விழுந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் பேராம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், பவதாரணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். நீலா திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பின்னர், அங்கிருந்து தர்மபுரி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Tirupattur ,
× RELATED மண்டைய உடைக்குறாங்க… மரியாதை கொடுக்க...