உடுமலை, மார்ச் 20: உடுமலை நகராட்சி அலுவலகம் முன் மழைநீர் கால்வாயில் கழிவுநீர் தேங்குவதால் நோய்பரவு அபாயம் நீடிக்கிறது.
உடுமலை நகராட்சியில் பாதாள சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி முடிந்தது. பழைய திறந்தவெளி கால்வாய் தற்போது மழைநீர் வடிகாலாக பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் நகராட்சி அலுவலகம் அருகே, புதிதாக கட்டப்பட்ட மழைநீர் கால்வாயில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் மற்ற இடங்களில் கழிவுநீர் எளிதில் பரவும் நிலை நீடிக்கிறது. குறிப்பாக அரசு அலுவலகங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் இந்த கால்வாயில் தான் கலக்கிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதோடு கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் நீடிக்கிறது.இதை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் உடனடியாக மழைநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.