ஊட்டி, மார்ச் 20: தேர்தல் ஆணையம் சுவர் விளம்பரங்களுக்கு தடை விதித்துள்ள நிலையில், பேனர் எழுதுபர்கள் மற்றும் பெயிண்டர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். தேர்தல் வந்தாலே அனைத்து கட்சிகளும் அரசு, தனியார் மற்றும் பொது சுவர்களை புக்கிங் செய்து, அதில் கட்சிகளின் சின்னம், தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியின் தலைவர் பெயர் மற்றும் வேட்பாளர் பெயர்களை எழுதி ஓட்டுக் கேட்பது வழக்கும். கடந்த சில ஆண்டுகளாக பொது சுவர்களில் மற்றும் அரசு சுவர்களில் விளம்பரங்கள் செய்யக் கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்தது.
தனியார் சுவர்களில் அனுமதி வாங்கி எழுதலாம் என அறிவித்துள்ளது. ஆனால், பெரும்பாலான கட்சிகள் கிராமப்புறங்களில் சுவர்களில் விளம்பரம் செய்ய முன் வருவதில்லை.
மேலும், தலைவர்கள் வரும் சமயங்களில் மட்டும் டிஜிட்டல் பேனர்களை தயாரித்து ஆங்காங்கே வைக்கும் கட்சி நிர்வாகிகள் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வந்து சென்றவுடன் அவைகளை அகற்றி விடுகின்றனர். சுவர் விளம்பரங்களோ அல்லது பேனர்களிலோ எழுதி வைப்பதில்லை. தேர்தல் ஆணையத்தின் கெடு பிடியால், பெயிண்டர்கள் வருமானம் இன்றி தவித்து வருவதாக தெரிவித்தனர்.