அரசு வேலை வாங்கி தருவதாக ₹76 லட்சம் மோசடி செய்தவர் கைது

சேலம், மார்ச் 20: சேலத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 15 பேரிடம் ₹76 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். சேலம் அமானி கொண்டலாம்பட்டியைச் சேர்ந்தவர் மனோகர். வேலைவாய்ப்புத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவர் பணியில் இருந்தபோது, விழுப்புரம் மாவட்டம் கருணாபுரத்தை சேர்ந்த காபாகாந்தி (50) என்பவர் பழக்கமானார். அப்போது, தலைமை செயலகத்தில் உள்ள பலரை தனக்கு தெரியும் என கூறிய காபாகாந்தி, அவர்கள் மூலம் விஏஓ பணி வாங்கி தருவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து மனோகர், கடந்த 2015ம் ஆண்டு தனக்கு தெரிந்த 15 பேருக்கு அரசுப்பணி பெற்றுத்தரக்கூறி, ₹76 லட்சம் பணத்தை காபாகாந்தியிடம் கொடுத்துள்ளார். ஆனால் காபாகாந்தி ஒருவருக்கும் பணிபெற்றுத்தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டபோது மிரட்டலும் விடுத்துள்ளார். இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மனோகர், இதுகுறித்து சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று காபாகாந்தியை கைது செய்தனர்.

Related Stories: