சேலம், மார்ச் 20: சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் வடக்கு சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நேற்று சேலத்தில் நடந்தது. மத்திய மாவட்ட அவைத்தலைவர் கலையமுதன் தலைமை வகித்தார். பொருளாளர் சுபாஷ், காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் வேங்கடபதி, விசிக நிர்வாகி ஆறுமுகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகி காதர்உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளரான பார்த்திபனை அறிமுகப்படுத்தி மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ பேசுகையில், ‘‘சேலம் திமுக வேட்பாளர் பார்த்திபனை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். மத்தியில் இருக்கும் மோடி ஆட்சியை அகற்ற மக்கள் தயாராக உள்ளனர். இதனால் அந்த ஆட்சியை தூக்கி எறிவதற்கும், மாநிலத்தில் இருக்கும் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவும் இத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள 40 பேரும் வெற்றி பெறுவார்கள். தேர்தல் பிரசாரத்தில், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையேற்றம் குறித்தும், கடந்த தேர்தலின் போது பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததை பற்றியும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்,’’ என்றார்.