×

ஆத்தூர் அருகே ₹5 லட்சம் கேட்டு தனியார் திருமண மண்டபத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ஆத்தூர், மார்ச் 20: ஆத்தூர் அருகே தனியார் திருமண மண்டபத்தில்  வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி ₹5 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்த, மர்ம  ஆசாமி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இந்த திருமண மண்டபத்தின் மேலாளராக பழனிவேல்(37) என்பவர், கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவரது செல்போனுக்கு நேற்று மதியம் அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், திருமண மண்டபத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியுள்ளான். ₹5 லட்சம் பணம் தரவேண்டும். பணம் தரவில்லை எனில் மாலை 5 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டான். இதுகுறித்து மண்டப நிர்வாகிகளுக்கு பழனிவேல் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பிற்பகல் 3 மணியளவில் மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம ஆசாமி, பணத்தை தயார் செய்து விட்டீர்களா? என கேட்டுள்ளான். இதுகுறித்து திருமண மண்டப நிர்வாகிகள் கொடுத்த புகாரின்பேரில், ஆத்தூர் டிஎஸ்பி ராஜூ தலைமையிலான போலீசார் மற்றும் வெடிகுண்டு சோதனை பிரிவைச் சேர்ந்த போலீசார், திருமண மண்டபம் முழுவதும் சோதனை நடத்தினர். இதில், வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. இதனைத்தொடர்ந்து செல்போனில் பேசிய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : wedding hall ,Atoor ,
× RELATED இப்தார் நோன்பு திறப்பு