நாமகிரிப்பேட்டை, மார்ச் 20: நாமகிரிப்பேட்டை அடுத்த சேடர்பாளையம் அரசு பள்ளியில் உலக நுகர்வோர் விழிப்புணர்வு தினத்தையொட்டி பேரணி நடத்தப்பட்டது. ஓவ்வொரு ஆண்டும் மார்ச் 15ம் தேதி உலக நுகர்வோர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை கொண்டாடும் விதமாக, தொ.சேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் பேரணி நடந்தது. உலக நுகர்வோர் தினவிழாவில் மன்ற உறுப்பினர்கள் உட்பட ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவிற்கு பள்ளியின் முதுகலை தமிழாசிரியை பேபி தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியை சுமதி முன்னிலை வகித்தார். மன்ற ஒருங்கிணைப்பாளர் மதுரம் வரவேற்றார். பள்ளியின் பிடிஏ துணைத்தலைவர் பழனிவேல் கலந்து கொண்டு நுகர்வோர் உரிமைகள், கடமைகள், கலப்படம், போலி விளம்பரங்கள் குறித்து விரிவாக பேசினார்.தொடர்ந்து, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய மாணவர்களின் பேரணி சேடர்பாளையத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. பேரணியில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இதில், ஆசிரியர்கள் சதீஷ், சுந்தரராஜன், செந்தில், முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.