திருச்சி, மார்ச் 20: திருச்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியதால் போலீசாரின் சோதனைகளுக்கு பிறகே கலெக்டர் அலுவலகத்தில் அனைவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. நேற்று முதல் நாளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வரவில்லை. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று 19ம் தேதி தொடங்கியது. வேட்பு மனுக்களை காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர் உள்பட 5 பேர் அனுமதிக்கப்படும் எனவும் திருச்சி கலெக்டரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவராசு தெரிவித்திருந்தார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் நேற்று காலை முதல் மாநகர போலீசார் அதிகளவில் நுழைவு வாயில் முன்பு குவிக்கப்பட்டனர். இவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் செல்லும் பணியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் ஆகியோரின் அடையாள அட்டையை பார்த்து உறுதி செய்த பின்னரே உள்ளே அனுமதித்தனர். அதேபோல் பொதுமக்கள் மனு கொடுக்க வந்தால் 5 பேர் வரை உள்ளே அனுமதித்தனர். ஆனால் முதல் நாளான நேற்று ஒருவர் கூட மனு தாக்கல் செய்யவில்லை. வேட்புமனு தாக்கல் தொடங்கியதன் காரணமாக நேற்று காலை முதலே திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.