×

முத்துப்பேட்டை அருகே பல்லாங்குழியான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

முத்துப்பேட்டை மார்ச்20: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த சங்கேந்தி கடைத்தெருவிலிருந்து பிரிந்து திருப்பத்தூர் வரையிலான சாலை என்பது முத்துப்பேட்டை, கோட்டூர் திருத்துறைப்பூண்டி ஆகிய இந்த மூன்று ஒன்றியங்களையும் இணைக்கும் ஒரு முக்கிய சாலையாகும். இந்த வழியாக கோட்டூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் குறுக்கு வழி பாதையாகும், இந்த சாலையில் சங்கேந்தியிலிருந்து மாங்குடி கிராமம் வரை முத்துப்பேட்டை ஒன்றியமும், மாங்குடியிலிருந்து திருப்பத்தூர் வரை கோட்டூர் ஒரு பகுதி, திருத்துறைப்பூண்டி ஒரு பகுதி என பிரிந்து சேருகிறது. இந்நிலையில் இந்த சாலை போட்டு சுமார் 10ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் சாலை முழுவதும் பல்லாங்குழியாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனை சென்றாண்டுகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதாக கூறி பெயரளவில் சீரமைக்கப்பட்டது.

 தற்பொழுது அந்த சாலையும்  சேதமாகிவிட்டது. இதனால் இப்பகுதி வழியாக வரும் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் சரியான நேரத்தில் செல்ல முடியவில்லை. இதனால் இப்பகுதிக்கு வரும் ஒருசில பேருந்துகளும் பல நேரங்களில் வருவதில்லை. அந்தநேரத்தில் மக்கள் பல கிலோமீட்டர் நடந்தே செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதனால் இந்த சாலையை சீரமைத்து தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அரசும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளவே இல்லை. இந்நிலையில் தற்பொழுது நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில் இந்த சாலையை யார் சீரமைத்து தருவேன்னு சத்தியம் செய்து தருவார்களோ அவர்களுக்கு தான் எங்களது வாக்கு என்று இப்பகுதி மக்கள்  கூறி வருகின்றனர்.

Tags : Motorists ,road ,Muthupet ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...