முன்விரோத தகராறில் வாலிபருக்கு அடி உதை

கும்பகோணம், மார்ச் 20: கும்பகோணம் அருகே முன்விரோத தகராறில் வாலிபரை உருட்டுக்கட்டை, இரும்பு கம்பியால் தாக்கியவர்கள் மீது போலீசார் விசாரித்து வருகின்றனர். கும்பகோணம் அடுத்த துகிலி அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் ராஜ்குமார் (21). இவர் பொறியியல் படிப்பு படித்து முடித்து வீட்டில் இருந்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்த அதிமுக கோட்டூர் கிளை செயலாளர் சந்திரமனோகரன் மகன் வெற்றிவேல் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிவா, சக்திவேல், மனோகரன், சூர்யா ஆகியோருக்கும் ராஜ்குமாருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ராஜ்குமார், அவரது தந்தை கிருஷ்ணன் ஆகியோர் நேற்று காலை தங்களது குலதெய்வ கோயிலுக்கு கஞ்சனூர் வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்து வெற்றிவேல் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேரும் சேர்ந்து உருட்டுகட்டை மற்றும் இரும்பு கம்பியால் ராஜ்குமாரை தாக்கினர். இதில் படு காயமடைந்த ராஜ்குமார், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: