செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் தஞ்சை, மார்ச் 20: தஞ்சை, மயிலாடுதுறை நாடாளுமன்றம், தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற அயராது பாடுபட வேண்டுமென செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தஞ்சை திமுக வடக்கு, தெற்கு, திருவாரூர் மாவட்டங்கள் சார்பில் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி மற்றும் தஞ்சாவூர் சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக செயற்குழு கூட்டம், கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். தஞ்சை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் பேசியதாவது: திருவாரூர் மண்ணில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சுற்றுப்பயணத்தை நாளை (இன்று) துவங்குகிறார். நாட்டின் அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக திமுக வல்லமை பெற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள் என்றார். கூட்டத்தில் தஞ்சை திலகர் திடலில் இன்று மாலை தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிப்பது. கூட்டத்தில் திமுக நிர்வாகிகள், கூட்டணி மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்பது. திமுக செயல்வீரர்கள், கூட்டணி கட்சி தோழர்கள் மற்றும் தோழமை அமைப்பு நிர்வாகிகள் அயராது உழைத்து மாபெரும் வெற்றியை பெற்று தருவது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தஞ்சை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் நீலமேகம், தெற்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன், திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி.கலைவாணன், முன்னாள் அமைச்சர் உபயதுல்லா, எம்எல்ஏக்கள் எம்.ராமச்சந்திரன், டி.ஆர்.பி.ராஜா, முன்னாள் எம்எல்ஏக்கள் சித்தமல்லி சோமசுந்தரம், ஏனாதி பாலு, ராஜமாணிக்கம், மாவட்ட துணை செயலாளர் அண்ணா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்.ராமநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம், நகர அவைத்தலைவர் ஆறுமுகம் பங்கேற்றனர்.