புதுக்கோட்டை, மார்ச்.20: புதுக்கோட்டை பகுதியில் தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான உமாமகேஸ்வரி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையமானது வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் புகார் மையம் அமைக்க அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 14-ந் தேதி முதல் கட்டுப்பாட்டு மையம் மற்றும் புகார் மையம் செயல்பட்டு வருகிறது. தேர்தல் தொடர்பான மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முரணாக நிகழும் எந்த ஒரு நிகழ்வினையும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பொது மக்கள் தெரிவிக்க ஏதுவாக 1800 425 2735 என்ற கட்டணமில்லா எண் வழங்கப்பட்டு உள்ளது. பொது மக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை மேற்கண்ட எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.