×

தோகைமலை பகுதியில் தேர்தல் விதிமுறை காரணம் காட்டி கோயில் திருவிழாக்களில் பாரம்பரிய கலைநிகழ்ச்சி நடத்த தடை விதிப்பதா? பொதுமக்கள் அதிர்ச்சி

தோகைமலை, மார்ச் 20: தோகைமலை பகுதியில் தேர்தல் விதிமுறைகள் என்று காரணம் காட்டி திருவிழா நடைபெறும் கிராமங்களில் பாரம்பரியம் மிக்க நாடகங்கள் நடத்தக்கூடாது என்று போலீசார் தெரிவிப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கரூர் மாவட்டம் தோகைமலை சுற்றியுள்ள பகுதிகளில் மாசி மாதம் முதல் கோயில் திருவிழாக்கள் தொடங்குவது வழக்கமாகும். இதில் மாசி மாதம் முடிந்து தற்போது பங்குனி மாதம் முதல் ஆடி மாதம் வரை அனைத்து கிராமங்களிலும் கோயில் திருவிழா நடத்துவதும், திருவிழாவின் போது தமிழர்களின் பாரம்பரிய கலைகளை பறைசாற்றும் விதமாக கரகாட்டம், நாடகம், தேவராட்டம் உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இரவு முழுவதும் நடத்துவதும் வழக்கமாக இருந்து வருகிறது. திருவிழாவின் போது இரவு முழுவதும் நடைபெறும் நாடகம், கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகளை பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கண்டுகளித்து திருவிழாவை கொண்டாடி மகிழ்வார்கள். இந்த நிலையில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் என்று கடந்த 10ம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் கடந்த 10ம் தேதி முதல் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தது. தோகைமலையை சுற்றி திருவிழாக்கள் நடைபெறும் கிராமங்களில் ஒன்று முதல் 3 மாதங்களுக்கு முன்பே நாடகம், கரகாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் முன்பதிவு செய்வதும் வழக்கம்.

இதேபோல் இந்த ஆண்டும் கலைநிகழ்ச்சிகளுக்கு முன்பதிவு செய்து திருவிழாவிற்காக கிராம மக்கள் காத்துள்ளனர். ஆனால் தற்போது தேர்தல் விதிமுறைகளை காரணம் காட்டி விடிய விடிய நாடகம், கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று போலீசார் தடுத்து வருவதாக கூறுகின்றனர். இதனால் அனைத்து கிராமங்களிலும் பொதுமக்கள் வேதனையுடன் இருப்பதாக தெரிவிக்கின்றனர். தேர்தல் சம்பந்தமாக விளம்பரப்படுத்தாமல் வரலாற்று சிறப்புமிக்க கதைகள், நடனம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு போலீசார் தடைவிதிப்பது கவலை அளிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே தோகைமலை பகுதிகளில் திருவிழாவின் போது பாரம்பரியம்மிக்க கதைகள், நடனத்தை பறைசாற்றக்கூடிய நாடகம், கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தோகைமலை பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து பெரம்பலூர் பாராளுமன்ற தேர்தல் நடத்தும் துணை அலுவலர் லியாகத்திடம் கேட்டபோது, தேர்தல் விதிமுறைகளின் படி இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கி மூலம் தேர்தல் சம்பந்தமாக எந்தவொரு பிரசாரமும் செய்யக்கூடாது. கிராமங்களில் நடைபெறும் திருவிழாவிற்கும், பாரம்பரிய நிகழ்ச்சிகளுக்கும் யாரும் தடைவிதிக்கவில்லை. ஆனால் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல்துறையினர் எடுக்கும் முடிவுகளுக்கு கிராம மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags : temple festivals ,art performances ,area ,Thodigamalai ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...