×

கரூர் வெங்கக்கல்பட்டியில் பழுதடைந்து மோசமான நிலையில் வேளாண். அலுவலக கட்டிடம்

கரூர், மார்ச் 20: கரூர் வெங்ககல்பட்டியில் பயன்பாடற்ற நிலையில் உள்ள வேளாண் அலுவலகத்தை வேறு பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட வெங்கக்கல்பட்டியில் தேசிய மானாவாரி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் விவசாயிகள் தொடர்பு மையம் கட்டப்பட்டு பல ஆண்டுகளுக்கு முன்பு வரை பயன்பாட்டில் இருந்து வந்தது. தற்போதைய நிலையில் இந்த கட்டிடம் எந்தவித பயன்பாடும் இன்றி பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஆங்காங்கே விரிசல்கள் கண்டுள்ள இந்த கட்டிடத்தை சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளன. சிறுவர், சிறுமிகள் அதிகளவு இந்த பகுதியில் உள்ளனர். மேலும் இந்த கட்டிடத்தின் அருகிலேயே அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது. எனவே இதனை புதுப்பித்து வேறு அரசு கட்டிட பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இந்த பகுதியை பார்வையிட்ட அதிகாரிகள் குழுவினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தேவையான வகையில் மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறிச் சென்றுள்ளனர். எனவே பழுதடைந்து மோசமான நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை வேறு பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Karur Venkalppatti ,Office building ,
× RELATED நூறாண்டுகளை கடக்கும் பாளை மண்டல...