×

உடல்நலக்குறைவால் இறந்த இன்ஸ்பெக்டர் உடலுக்கு உயரதிகாரிகள் மரியாதை

நெல்லை, மார்ச் 20: பாளை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ராமையா (45). நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் 3 ஆண்டுகளாகப் பணியாற்றிய மற்றும் சொந்த மாவட்டத்தில் பணியாற்றியவர்கள் தேர்தல் ஆணையம் உத்தரவின்பேரில் வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி பாளையில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் ராமையா, சென்னை ஐசிஎப் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து அங்கு பணியில் சேர்ந்த அவர், கடந்த 8ம் தேதி வழக்கம்போல் பணியில் இருந்தபோது திடீரென மயங்கினார். இதையடுத்து அவர் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளை நரம்புகளில் ஏற்பட்ட பாதிப்பால் நினைவு திரும்பாத நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அவருக்கு மனைவி மற்றும் கல்லூரியில் படித்து வரும் மகன் உள்ளனர்.

சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் பாளை ஆயுதப்படை மைதானத்திற்கு நேற்று மாலை கொண்டுவரப்பட்ட இன்ஸ்பெக்டர் ராமையாவின் உடலுக்கு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன், எஸ்பி அருண்சக்திகுமார், மாநகர துணை கமிஷனர்கள் சாம்சன், பெரோஸ்கான் அப்துல்லா உள்ளிட்ட உயரதிகாரிகள் மற்றும் போலீசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள ராமையாவின் சொந்த ஊரான அயன்சிங்கம்பட்டிக்கு கொண்டுசெல்லப்பட்ட அவரது உடலுக்கு அம்பை டிஎஸ்பி ஜாகீர்உசேன், கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இரவு 8 மணிக்கு போலீசாரின் 21 குண்டுகள் முழக்கத்துடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

Tags : Inspector ,
× RELATED கள்ளச்சாராயம் விற்ற வாலிபர் கைது